அன்று பள்ளிக்கூடம் முடிந்து தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தின் அடியில் சோகமாக வந்து அமர்ந்திருந்தாள் ரோகிணி. ரோகிணிக்கு அருகில் வந்த கிளி “என்ன ரோகிணி ஏன் சோகமா இருக்கிறே?” என்று கேட்டது. “ எனக்கு இந்தப் பள்ளிக்கூடமே பிடிக்கல. எப்பப் பாரு எழுது படினு சொல்றாங்க. அம்மா வீட்டுக்கு வந்தா ஒரே அறிவுரையாச் சொல்லறாங்க. அப்பா அதக் கத்துக்கணும் இதைக் கத்துக்கணும்னு அப்பத்தான் இந்தப் போட்டியான உலகத்தில் வாழ முடியும் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருப்பார்” என்றாள் சோகமாக ரோகிணி. “நல்லதுதானே படிக்கனும் நிறைய விஷயங்களைக் கத்துக்கனும் அப்பத்தானே இந்த உலகத்தில் வாழ முடியும்” என்றது கிளி. “நீங்க எல்லாம் கத்துக்கிட்டுத்தான் வாழ்ந்துகிட்டு இருக்கீங்களா?” உங்கள மாதிரி எந்த வேலையும் இல்லாம ஜாலியா பறக்கணும் என்று ஆசை” என்றாள் ரோகிணி. அப்ப நாங்க எதுவுமே கற்றுக்கொள்ளலை அப்படின்னு நினைக்கிறாயா? ஜாலியா இருக்கறோம்னு அப்படின்னு நினைக்கிறயா?” என்று கேட்டது கிளி. “ நீ மட்டும் இல்லை. இதோ பார் இதோ இந்த அணில் கூட ஜாலியா தான் இருக்குது” என்றாள் ரோகிணி. “ என்னது நாங்க ஜாலியா இருக்கிறோமா! எங்களோட ஒருநாள் இருந்து பார்த்தால்தான் தெரியும்” என்றது அணில். “ உங்கள மாதிரி இருந்தா நான் ரொம்ப ஜாலியா இருப்பேன்” என்றாள் ரோகிணி. அப்பொழுது கிளி ரோகிணியின் தலையில் கொத்த ரோகிணியும் ஒரு கிளியாக மாறி பறக்க ஆரம்பித்தாள். “ரோகிணி இன்னைக்கு முழுக்க நீ என்னுடன் இருக்க போகிறாய் போலாமா?” என்று கேட்டது கிளி.
“ எங்க போலாம் நான் ரெடியா இருக்கேன்” என்றாள் ரோகிணி. இருவரும் பறந்து சென்று ஒரு பெரிய மரத்தின் மேல் அமர்ந்தார்கள். கிளி பறந்து கொண்டிருந்தாலும் மரத்தின் மேல் அமர்ந்து இருந்தாலும் அதனுடைய பார்வை சுற்றிக் கொண்டே இருந்தது. “என்ன நீ எப்ப பார்த்தாலும் சுத்தி சுத்தி எதவோ தேடறமாதிரி பார்த்துக்கிட்டே இருக்க?” என்று கேட்டாள் ரோகிணி. “ ஒரு நிமிஷம் எழுந்திரு எழுந்திரு வேகமா பற வேகமா பற” என்று கிளி கத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பெரிய கல்லொன்று இவர்களைக் கடந்து பறந்து சென்று கீழே விழுந்தது. “அச்சச்சோ இன்னும் கொஞ்சம் இல்ல அது என் தலையைப் பதம் பார்த்திருக்கும்” என்றாள் ரோகிணி. அதுக்குதான் பறக்கச் சொன்னேன். சரி சரி வா இன்னும் கொஞ்ச தூரம் போனா அங்க ஆட்களே இருக்க மாட்டாங்க. ஒரு பெரிய ஆலமரம் இருக்கும் அங்க போய் உட்கார்ந்து பேசலாம்” என்று கூற இருவரும் பறந்து சென்று அந்த ஆலமரத்தில் அமர்ந்தார்கள். “அந்தக் கல் எப்படி வந்துச்சு?” என்று கேட்டாள் ரோகிணி. “உங்கள மாதிரி சின்ன பசங்க தான் எங்களைப் பார்த்தா கல்லெடுத்து அடிக்க ஆரம்பிச்சிடுவாங்க” “அப்படியா!” என்றாள் ரோகிணி ஆச்சரியமாக. “ அங்கிருந்து தப்பித்து வந்தா இங்கே எங்களை விடப் பெரிய பெரிய பறவைகள் எல்லாம் துரந்துங்க. அதைத்தாண்டி இந்த வேட்டையாட வந்து எங்களை பிடிச்சுட்டு போயி ஜோசியம் பார்க்க வைப்பாங்க” “ அச்சச்சோ” “சில பேரு எங்கள வீட்டில் வளர்த்த ஆசைப்படுவாங்க. கூண்டில் போட்டு எங்களுக்கு பேச்சு வேற பழக்க எங்களப் பாடாப் படுத்துவாங்க அவங்க கிட்ட இருந்து தப்பிக்கனும்” என்றது கிளி. “அப்புறம் அப்புறம்” “என்ன கதையா கேட்டுட்டு இருக்கிற பசிக்கலையா உனக்கு?” “பசிக்குது பசிக்குது” “சரி வா ரெண்டு பேரும் போய் அப்படியே அந்த தோட்டத்தில் கொஞ்சம் மிளகாயைச் சாப்பிடலாம்” என்று கிளி கூற இருவரும் பறந்து சென்று மிளகாய்த் தோட்டத்தில் உள்ள மிளகாயைக் கொத்திச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது தோட்டக்காரர் கல்லை எடுத்து இவர்களைத் துரத்தினார். வேகமாக ஓடிவந்து ஒரு பெரிய வேப்ப மரத்தில் அமர்ந்தார்கள். ங்கு படர்ந்திருந்த கோவைக்காயைக் கொத்த ஆரம்பித்தார்கள். “பாத்தியா நாங்க சாப்பிடுவதனால் கூட கஷ்டம் உயிரை கையில் பிடித்து விட்டு தான் ஒவ்வொரு நாளும் நாங்க வாழனும்” என்றது கிளி. “எனக்குத் தண்ணி வேற ரொம்பத் தாகமா இருக்கே” என்றாள் ரோகிணி.
“இந்தத் தோட்டக்காரர் இன்னும் போயிருக்க மாட்டாரே. தோட்டத்தில் தண்ணீர் குடிக்க முடியாது. பக்கத்தில் இன்னொரு இடத்துல தண்ணி இருக்குது குடிக்கலாம்” என்று கிளி கூற இருவரும் வேகமாக பறந்தார்கள். போகும் வழியில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரை குடிக்க அமர்ந்தார்கள். “ஐய்யே இது என்ன தண்ணி இந்த நிறத்தில் இருக்குது. எனக்கு வேண்டாம் கெட்ட வாசம் வேற அடிக்குது” என்றாள் ரோகிணி. “சாயத்தண்ணி நாங்க இதையும் குடிப்போம் என்ன பண்றது. ஒன்னும் பண்ணாது குடி” என்றது கிளி. “ ஐயோ எனக்கு வேண்டாம்”என்றால் ரோஹிணி. “சரி வா இன்னும் கொஞ்சம் தூரம் போகலாம்.இன்னொரு பக்கம் தண்ணீர் இருக்கு குடிக்கலாம்” என்று ரோகிணியைக் கூட்டிக்கொண்டு பறந்தது கிளி. சாக்கடைக்கு அருகில் இருவரும் அமர்ந்தார்கள். “இது என்ன சாக்கடைத் தண்ணீர். இது எனக்கு பிடிக்காது பிடிக்காது. ஒரே அழுக்கு கெட்ட வாசமா இருக்குது. இந்தத் தண்ணி எனக்குப் பிடிக்காது” என்றாள் ரோகிணி. என்ன செய்யறது நல்ல தண்ணீரில் சில நேரங்களில் கிடைக்காது. இதுதான் குடிச்சுக்கோ வேற வழி இல்லை” என்றது கிளி. “ஐயோ எனக்குப் பிடிக்கவே இல்லை. நான் வீட்டுக்குப் போறேன். நான் சாப்பிடணும் பசிக்குது” என்றால் ரோஹிணி. “இதுக்கே இப்படின்னா இன்னும் சாயந்திரம் வரைக்கும்” என்றது கிளி. “ஐயோ ஐயோ என்னால தாங்க முடியாதுப்பா. என் வீட்டுக்கு நான் போறேன் என்று ரோகிணி கூற இருவரும் பறந்து சென்றார்கள். அவர்கள் வீட்டின் முன் இருக்கும் மரத்திற்கு கீழே பறந்து வந்தவுடன் ரோகிணி தன் பழைய உருவத்தை அடைந்தாள். “இவ்வளவு கஷ்டமான வாழ்க்கையா நீங்க பறந்துக்கிட்டு இருக்கிறதைப் பார்த்து நீங்க ரொம்ப ஜாலியா இருக்கீங்கன்னு நினைச்சேன்” என்றாள் ரோகிணி. “நாங்க வாழ்ற ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு நாளும் ஏன் தூங்கும் போதுகூட விழிப்போடு இருக்கணும்.
இல்லைனா எதிரிகளால் நாங்க கொல்லப்படுவோம். இதையெல்லாம் கடந்து கூட நான் சந்தோஷமா தான் வாழ்ந்துட்டு இருக்கேன்” என்றது கிளி. “சரி பச்சைக்கிளியோட வாழ்க்கையைப் பாத்துட்டு வந்துட்டே. என்கூட வரியா என்னோட வாழ்க்கையும் பார்த்துடலாம்” என்று கேட்டது அணில் “அச்சச்சோ எனக்கு இப்போ புரிஞ்சு போச்சு ஒவ்வொருத்தரோட வாழ்க்கையும் சந்தோஷமும் இருக்குது கஷ்டமா இருக்குது. அதுக்கு ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்” என்றாள் ரோகிணி. “இப்பவாவது புரிஞ்சுகிட்டியே” என்றது அணில். “மன்னிச்சிடுங்க உங்களை எல்லாம் பார்க்கும் போது என்னோட வாழ்க்கை எவ்வளவு ஜாலியா இருக்குது. நாங்க யாருக்காகவும் உயிரைக் கையில புடிச்சிட்டு பயந்து ஓட வேண்டியதில்லையே. ஆனா நீங்க ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில பிடிச்சு இல்ல வாழ வேண்டி இருக்கு” என்றாள் ரோகிணி. “உயிரை கையில் பிடித்து மட்டும் இல்லை. சில நேரம் சாப்பாடு கிடைக்காது. தண்ணீர் கிடைக்காது. ஆனா நாங்க யாரு ஒருநாளும் உட்கார்ந்து கவலைப்பட்ட அழுதது கிடையாது” என்றது பச்சைக்கிளி. அடுத்த நாள் காலை ரோகிணியின் வீட்டிற்கு முன் ஒரு மண் குவளையில் தண்ணீரும் இன்னொரு மண் குவளையில் தானியங்களும் மற்றொரு மண் குவளையில் சாப்பாடும் வைக்கப்பட்டு இருந்ததை பார்த்த கிளி சந்தோஷமடைந்து வந்து கொத்திச் சாப்பிட்டது. கதைசொல்லி சரிதா ஜோ ஈரோடு